பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவருடன் அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. முறையற்ற காரணங்களை கூறி இம்ரானின் மனு தள்ளுபடி ஆனதாக அவர் கட்சி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் இம்ரான் கானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் சுமார் எட்டு பக்கம் கொண்ட அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் அறிக்கையில், இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேர்மையற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்தகைய ஒருவர் தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமை இழந்தவராகிறார்.
இம்ரானின் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் அவர்கள் கூறிய தொகுதிகளில் வசிக்கவில்லை; அதுவும் ஒரு காரணம். அரசு கஜானாவிற்கு சேர்க்க வேண்டிய பொருளை முறைகேடாக பயன்படுத்தி லாபம் ஈட்டிய வழக்கில் நேர்மையற்றவராக கருதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தகுதியின்மை அவருக்கு தொடர்கிறது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இம்ரான் இழக்கிறார்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. பிடிஐ கட்சியின் 90 சதவிகித தலைவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: தலையாய பிரச்சினைக்குத் தீர்வுகள் உண்டா?
தூத்துக்குடி: 14 நாட்களுக்குப் பின்னர் மின் உற்பத்தி!