காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை காலி செய்வதாக வீட்டு வசதி குழு துணை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நாடாளுமன்ற மக்களவை வீட்டுவசதி குழு துணை செயலாளர் மோகித் ராஜன் நேற்று (மார்ச் 27) கடிதம் எழுதினார்.
அதில், “17-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த நீங்கள் மார்ச் 23-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டீர்கள். 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை ஒரு மாதத்திற்குள் (ஏப்ரல் 22) காலி செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மோகித் ராஜனுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள பதில் கடிதத்தில், “துக்ளக் லேன் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்திற்கு நன்றி.
கடந்த 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் துக்ளக் லேன் பங்களாவில் மகிழ்ச்சியான நினைவுகளை பெற்றேன். எனது உரிமைகளுக்கு எந்தவித பாதகமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நான் நிச்சயமாக கட்டுப்பட்டு அரசு பங்களாவை காலி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்