இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து, இப்போதே அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிஜேபி ஆட்சி நடைபெற்று வரும் இந்த மாநிலத்தில், வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முனைப்பு காட்டிவருகிறது.
இதன் ஒருபகுதியாக, காங்கிரஸ் கட்சி தற்போது ,அந்த மாநிலத்திற்கு 10 உத்தரவாதங்களை அளித்துள்ளது.
தன்னுடைய முகநூல் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, “இமாச்சல பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இனி காங்கிரஸ் கட்சியின் ‘கியாரண்டி (அறிக்கையின் பெயர்)’.
காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களின் நலன் மற்றும் அவர்களின் வளர்ச்சி பிரச்சினைகள் பற்றிப் பேசும்.
இந்த உத்தரவாத அட்டையில் ஹிமாச்சல் மக்களின் பிரச்சினைகளை கிராமம் கிராமம் வரை சமாளித்து உள்ளூர் மக்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம்.
பின்னர் அவற்றின் தீர்வுகளைத் தீர்ப்பதற்காக உருவானதே, இந்த ‘உத்திரவாத அட்டை’. அதன்படி, காங்கிரஸ் கட்சி முக்கியமாக 10 விஷயங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம், பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,500, வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம், 5 லட்சம் வேலைவாய்ப்பு, பயிர்கள் மற்றும் பழங்களுக்கு சரியான விலை, தொடக்க நிதி ரூ 680 கோடி,
நடமாடும் மருத்துவமனை, ஆங்கிலவழிப் பள்ளி, உள்ளூர் மக்களிடம் பசு, எருமை மாட்டு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும்; 10 லிட்டர் பால் வாங்கப்படும்” என்று பதிவிட்டுள்ள அவர்,
“ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.
இனிவரும் காலங்களில் எந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வகையிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
இந்த உத்திரவாத அட்டையை கவனமாக படித்து, உங்கள் எதிர்காலத்தை நினைத்து புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.
இமாச்சல மக்களும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து இமாச்சல பிரதேசத்தை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதில் #HimachalKaSankalp என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடி இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம் மோசமானது என்று கூறினார்.
இதனால், நாடு முழுவதும் இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,500, வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார் ராகுல்.
2018ல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி வகித்தார். இதில் தெலங்கானா, மிசோரத்தை தவிர மற்றும் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்தசூழலில் தற்போது இமாச்சலப் பிரதேச தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி எடுத்து வரும் முன்னெடுப்புகள் மூலம் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.
ஜெ.பிரகாஷ்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி?: கெலாட்டை எதிர்கொள்கிறாரா?