பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மனித மற்றும் விலங்குகளின் கழிவு அதிகளவில் கலந்திருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயம் இன்று (பிப்ரவரி 18) அதிரடி உத்தரவிட்டுள்ளது. Green Tribunal shock on ganga dirty
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, வரும் 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கங்கை மற்றும் யமுனை நதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்த புகாரையடுத்து, பிரயாக்ராஜில் நீரின் தரம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றைக் கடுமையாகக் கண்காணிக்க கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதன்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஜனவரி 12, 13ஆம் தேதிகளில் கங்கையில் இருநாட்கள் பரிசோதனை செய்தது.
அதனை ஆய்வு மேற்கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த ஆய்வின் முடிவில், ”கங்கை நதியின் தரம் குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப்போகவில்லை.
கங்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும், மல பாக்டீரியாக்கள் எனப்படும் ஃபெக்கல் கோலிஃபார்ம் (FC) அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கங்கை நீரில் குளிப்பதாலும், காணிக்கைகளை அங்கேயே விடுவதாலும் நீரின் தரம் மேலும் மோசமடையும்.
இந்தப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP-கள்) பொதுவாக செயல்பட்டு வந்தாலும், மத சடங்குகளின் போது மாசுபாடு அளவு அதிகரித்துள்ளது” என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! Green Tribunal shock on ganga dirty
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சமர்ப்பித்த இந்த அறிக்கையைத் தொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, “சிபிசிபி ஆய்வின் கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (UPPCB) அதிகாரிகளை நாளை காணொளி முறையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவும்,
அப்போது அதிகரித்து வரும் மாசு அளவுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.