சிறுமிகளை வைத்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த கன்னியப்பன், தன்னுடைய வாத்துப் பண்ணையைக் கவனிப்பதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் இருந்த 5 சிறுமிகளை அழைத்து வந்துள்ளார்.
அவர், அந்தச் சிறுமிகளை கொத்தடிமைகளாக ஈடுபடுத்துவதாக, புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு, அந்தச் சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காட்டில் வீட்டில் அடைத்து வைத்து பண்ணை தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது.
பண்ணையில் உள்ள அறையில் அந்த சிறுமிகளுக்கு கன்னியப்பன் உள்பட பலர் கஞ்சா, மது, போதை பொருட்களை கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சிறுமிகளை கட்டிவைத்து சிறுவர்கள் உள்பட பலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை போலீசார் உதவியுடன் மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் முடிவில் 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் அடையாளம் காட்டியதன்படி கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர் பசுபதி, அய்யனார் மற்றும் ஒரு சிறார் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 22) தீர்ப்பு வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியப்பன், ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும்,
கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.7 லட்சமும் மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு அளித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
யூடியூப்பில் கெட்டதைப் பேசினால் பணம்: விஜய் சேதுபதி
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!