இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) துவங்கியது.
நாளை பட்ஜெட் தாக்க செய்ய உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், “கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியாவின் பொருளாதாரமானது மிக வேகமாக மீண்டு வருகிறது. இதற்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் முதலீடே காரணமாகும்.
இந்த நிதியாண்டின் 2-ஆம் பாதியில் ஏற்றுமதியானது சராசரியாகவே இருந்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2023-24-ஆம் ஆண்டு 6.5 சதவிகிதமாக இருக்கும்.
ரஷ்யா,உக்ரைன் மோதலால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவுகளில் இருந்து இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்திக்காமல் உள்ளது.
2022-ஆம் ஆண்டு ஜனவரி-நவம்பர் காலகட்டத்தில் கடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் 30.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் ஏற்றுமதியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது. 2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6-6.8 சதவிகிதமாக இருக்கும்.
தனியார் நுகர்வு, மூலதன உருவாக்கம் ஆகியவை நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியால் வேலைவாய்ப்பை உருவாக்க உதவியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஈரோடு கிழக்கு : நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைகள்!
சரிவில் இந்தியப் பொருளாதாரம்: சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி தகவல்!