பரவிய வதந்தி… ரயில் மோதி 8 பேர் பலி!

Published On:

| By christopher

தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் ரயிலில் இருந்து குதித்தவர்களில், 8 பேர் எதிரே வந்த மற்றொரு ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கி இன்று (ஜனவரி 22)சென்று கொண்டிருந்தது.

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரயில் நிலையம் அருகே ரயில் இன்று மாலை வந்தபோது, B4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.

இதற்கிடையே ரயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், அந்த ரயிலில் இருந்து ஏராளமான பயணிகள் அவசர அவசரமாக இறங்கியுள்ளனர்.

அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் உடைமைகளுடன் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியது.

இதில் 8 பேர் சம்பவ இடத்தியே உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பலியானதாக மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்வப்னில் நிலா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

“புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ‘ஹாட் ஆக்சில்’ அல்லது ‘பிரேக்-பைண்டிங்’ (ஜாமிங்) காரணமாக தீப்பொறிகள் ஏற்பட்டதாக ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share