ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் குஜராத் வந்த பாகிஸ்தான் படகை இந்தியக் கடலோர காவல் படை பறிமுதல் செய்தது.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே குஜராத் மாநில பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்தியக் கடலோர காவல் படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 33 நாட்டிக்கல் மைல் தொலைவில் பாகிஸ்தானியப் படகு இந்தியக் கடலோர பகுதிக்குள் 6 கிலோ மீட்டர் வரை நுழைந்திருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்ட இந்தியக் கடலோர காவல் படை அதிகாரிகள், இரண்டு விரைவு படகுகளில் சென்று பாகிஸ்தானியப் படகை மடக்கிப் பிடித்தனர்.
அதில், ரூ. 200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றியதுடன் படகில் பயணித்த 6 பாகிஸ்தானியர்களைக் கைது செய்துள்ளதாகப் பயங்கரவாத ஒழிப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படவுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டு ஹெராயினை கைப்பற்றியதாகவும் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களைக் கடலோர காவல் படை அதிகாரிகள் ஜக்காவ் கடற்கரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் போதைப் பொருட்கள் மற்றும் விஷச் சாராயத்தால் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன. மாநிலத்தில் ஆளும் கட்சி இதனைக் கண்டு கொள்ளாமல் ஆதரவு அளித்து வருகிறது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா