அமேசான் செயல் தலைவரும் கோடீஸ்வரருமான ஜெஃப் பெசோஸ், ‘பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்பதால் கையில் இருக்கும் பணத்தை, பொருட்களை வாங்கி வீணடிக்காதீர்கள். பணத்தை பத்திரப்படுத்துங்கள்’ என்று எச்சரித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் அமெரிக்க மக்களுக்காக இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தாலும் உலகம் முழுவதும் இந்த எச்சரிக்கை முக்கியத்துவமாக கவனிக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் விடுமுறை சீசன் நெருங்குகிறது. பொதுவாகவே விடுமுறை காலங்களில் அமெரிக்கர்கள் தங்களது வருடாந்திர சேமிப்பு மற்றும் போனஸ் பணத்தைப் பயன்படுத்தி நீண்ட தூர சுற்றுலா செல்வார்கள் அல்லது விலை உயர்ந்த பொருட்களை வீட்டுக்காக வாங்குவார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு ஜெஃப் பெசோஸ் விரிவான ஒரு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் பொருளாதார வீழ்ச்சி என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் உலக மீடியாக்களில் நேற்று (நவம்பர் 19) முதல் பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த பேட்டியில், “பொருளாதார மந்த நிலை வர இருக்கிறது. எனவே மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வீணாக செலவழிக்காமல் பத்திரப்படுத்தி வையுங்கள்.
அமெரிக்கா மந்த நிலையில் இருப்பதால், புதிய கார்கள் மற்றும் டிவிக்கள் போன்ற பெரிய விலைகொண்ட பொருட்களை வாங்குவதை அமெரிக்க குடும்பங்கள் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய திரை டிவியை வாங்க நினைக்கிறீர்களா? கொஞ்சம் காத்திருங்கள். புதிய வாகனங்கள், குளிர்சாதன பெட்டி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் இப்போது வாங்காதீர்கள்.
பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை. பொருளாதாரத்தின் பல துறைகளில் பணிநீக்கங்களை பார்த்து வருகிறோம்.
அதனால் கையில் இருக்கும் பணத்தை கரைத்துவிடாதீர்கள்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார் அமேசான் செயல் தலைவரான ஜெஃப் பெசோஸ்.
இது அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அவர் விடுத்த அலர்ட் ஆக இருந்தாலும் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் தலைவர் இவ்வாறு வெளிப்படையாக,
‘பொருட்களை வாங்காதீர்கள்’ என்று சொல்லியிருப்பது இந்தியா உட்பட உலகத்தின் அனைத்து நாடுகளிலும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனம், மெட்டா, சொமெட்டோ போன்ற நிறுவனங்கள் சமீப நாட்களில் தங்களது ஊழியர்களை குறிப்பிடத் தக்க அளவு பணி நீக்கம் செய்திருக்கும் நிலையில் அமேசான் தலைவரின் இந்த எச்சரிக்கை உலகம் முழுவதற்குமே உரியதாகிறது.
–வேந்தன்