கடன் வசூலிப்பவர்கள், கடன் வாங்கியவர்களை மிரட்டவோ அச்சுறுத்தவோ, இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் தொலைபேசியில் அழைக்கவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு
கடன் தவணையை வசூலிப்பதற்கு என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே சில விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், கடன் வசூலிப்பவர்கள் அந்த விதிமுறைகளை மீறி செயல்படுவதை கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால், ரிசர்வ் வங்கி கடன் வசூலிக்கும் விதிமுறைகளின் புதிய உத்தரவையும் தற்போது வெளியிட்டுள்ளது.
ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது கடனை வசூலிக்கும் முகவர்கள், யாரிடமும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தலில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக தவறான குறுஞ்செய்திகளை அனுப்பக் கூடாது. காலை 8 மணிக்கு முன்பாகவும், இரவு 7 மணிக்கு பிறகும் தொலைபேசியில் அழைப்பு விடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிதி நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
நெருக்கடிகளுக்கு விலகல்
மக்கள் தங்கள் தேவைக்காக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்குகிறார்கள். கடன் கொடுக்கும் போது கண்ணியமாக நடந்துக் கொள்வதும், கடனை திரும்ப பெரும் போது கடுமையாக நடந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இது போன்ற தொல்லைகளால் கடன் வாங்கிய சிலர் தற்கொலை செய்துக் கொள்ளும் கொடுமைகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மோனிஷா
பேபி பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன்!