ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 8) கொண்டாடப்படும்போது தங்கள் பகுதிகள் உள்ள தெரு நாய்கள், பூனைகள், மாடுகள் போன்ற விலங்குகளின் மீது வண்ணங்கள் பூசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி நாளை (மார்ச் 8) புதன்கிழமை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
தீயவற்றை நல்லவை வெற்றி கொண்டதன் அடையாளமாகக் கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகை நாளில்,
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெருக்களில் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளைத் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
மக்களின் இந்த கொண்டாட்டத்தின்போது தெரு நாய்கள், பூனைகள், மாடுகள் போன்ற விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே அவற்றின் மீது வண்ணங்கள் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கர்நாடக விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக விலங்குகள் நல வாரிய உறுப்பினர் செயலர் வெளியிட்ட உத்தரவில்,
“ஹோலி கொண்டாட்டத்தின்போது விலங்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
அறியாமையால் நாய்கள், பூனைகள், பசுக்கள் போன்ற விலங்குகள் மீது மக்கள் வண்ணங்களைப் பூசுகின்றனர்.
வண்ணங்கள், விலங்குகளின் கண்களில் படும்போது அதனால் அவற்றின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
மேலும் விலங்குகள் தங்களின் மீதுள்ள வண்ணங்களை நாக்கால் நக்கியே சுத்தம் செய்யும்.
அப்படிச் செய்யும்போது வண்ணப் பொடிகள் விலங்குகளின் வயிற்றுக்குச் செல்வதால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை சந்திக்கின்றன.
எனவே இவற்றைத் தடுக்க, ஹோலி பண்டிகையின்போது தங்கள் பகுதிகளில் உள்ள தெரு நாய்கள், பூனைகள், மாடுகள் போன்ற விலங்குகளின் மீது வண்ணங்கள் பூசுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இதை மீறுபவர்கள் மீது விலங்கு வதை சட்டம் 1960 -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விலங்குகள் பாதிக்காதவாறு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்
வடமாநிலத்தவர் விவகாரம்: முன்ஜாமீன் கேட்கும் பாஜக நிர்வாகி!
அரசுப் போக்குவரத்து தனியார் மயமாவது உறுதி: டிடிவி தினகரன்