சென்னையிலிருந்து மலேசியா நாட்டின் தனித்தீவு பினாங்கிற்கு நேரடி தினசரி விமான சேவை இன்று (டிசம்பர் 21) முதல் தொடங்குகிறது.
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு தீவுகளில் பினாங்கு தீவு அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய தீவாகும். இந்த தீவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மக்கள் தொழில், வணிகம் ஆகியவை செய்து அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த தீவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இருந்து கோலாலம்பூர், தாய்லாந்து, சியோல், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், பினாங்கு தீவில் அதிகப்படியான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வசித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு நேரடி விமான சேவை இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால் பல்வேறு தமிழக அமைப்பினர், தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்துள்ளனர்.
ஆனால், இந்திய விமான நிலைய ஆணையம் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தொடர் வலியுறுத்தல் காரணமாக இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியாவில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க அனுமதியளித்தது.

அதன்படி, சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு இன்று அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டுள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் காலை 8.09 மணி சென்றடைகிறது.
அதேபோல் பினாங்கு தீவில் இருந்து காலையில் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
இந்த விமானம் சுமார் 180 பேருக்கு மேல் பயணிக்க கூடிய ஏர்பஸ் 320 (Airbus 320 family) ரகத்தை சேர்ந்தது. சென்னை – பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்களாகும். இதற்கான கட்டணமாக ரூ. 9,325 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : குவைத் செல்லும் பிரதமர் மோடி முதல் பூமிக்கு அருகில் 2 சிறுகோள்கள் வரை!