10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மற்றும் மாசடைந்த இந்திய நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 2027-க்குள் தடை விதிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் – இயற்கை நிலவாயு அமைச்சகம் அமைத்துள்ள மாற்று எரிசக்தி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த நகரங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.
டீசலில் இயங்கும் பேருந்துகளை அடுத்த ஆண்டு முதல் நகர பயன்பாட்டுக்கு மேற்கொண்டு சேர்ப்பதை தவிர்ப்பது, மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான ஊக்கம் கொடுப்பது, ஃபேம் திட்டத்தின் கீழ் வழங்கும் ஊக்கத்தொகையை நீட்டிப்பது, சரக்கு போக்குவரத்துக்கு ரயில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ட்ரக்குகளை பயன்படுத்துவது, தொலைதூர பேருந்துகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவில் இயங்கும் வகையில் இருப்பதை உறுதி செய்வது, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 100 சதவிகிதம் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ரயில் போக்குவரத்தை அமைப்பது என தனது அறிக்கையில் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இவை அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இலக்கையும் இந்த குழு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களுக்கான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டது.
அதில் 2021 மோட்டார் வாகனச் சட்டத்தின் ஸ்கிராப்பிங் பாலிசியின்படி, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து அகற்றி, ஸ்கிராப்பிங் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் வரும் ஏப்ரல் 1, 2023 முதல் தடை செய்யப்படும்.
அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் உட்பட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான, ஜீப்கள், குப்பை அள்ளும் லாரி மற்றும் வண்டிகள், டிரக், டிராக்டர், குடிநீர் லாரிகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடக்கம்.
பைங்குடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அதை குறைக்கும் இலக்கோடு மின்சார வாகனம் உள்ளிட்ட மாற்று முறை எரிசக்தி பயன்பாட்டினை இந்தியா முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ராஜ்
வங்கிக்கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.288 கோடி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
திருப்பதி பக்தர்கள்: பெங்களூரில் முடி காணிக்கை செலுத்தலாம்!