படுகாயமடைந்தவர்களை தமிழகம் அழைத்து வர விமானம் ஏற்பாடு: தென்னக ரயில்வே!

Published On:

| By Jegadeesh

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் 55 பேரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரையில் 24 பேர் தங்களது உறவினர்கள் குறித்த விவரங்கள் கேட்டறிந்துள்ளனர். மேலும், இன்று (ஜூன் 3) மாலை சென்னையில் இருந்து புறப்பட கூடிய சிறப்பு ரயிலில் செல்வதற்கு இதுவரையிலும் 4 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறை , ”சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகவும், விபத்துக்குள்ளான ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 127 பேர் பயணித்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் 14 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 17 பேர் ரயிலில் பயணம் செய்யவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்கள். 10 பேருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. 14 பேருடைய செல்போன்களுக்கு தொடர்பு கொள்ள இயலவில்லை. 7 பேரை தொடர்பு கொள்ள இயலாத சூழல் உள்ளது” என்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 127 பேரை தொடர்பு கொண்ட நிலையில் அதில் 96 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் 31 பேரின் நிலை அறிய தொடர்ந்து தொடர்புகொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோரமண்டல் ரயிலில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை தமிழ்நாடு அழைத்து வர விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னை – ஒடிசா சிறப்பு ரயில்: முன்பதிவிற்கு உதவி எண்கள் அறிவிப்பு!

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ வசதிகள் தயார்: உதயநிதி ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel