ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அப்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து புதினுக்கு ஜி ஜின்பிங் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போர் விஷயத்தில் சீனா நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறது. ஆனால், சீன அரசாங்கம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் மூன்று நாட்கள் பயணம் அமைந்திருப்பதாகப் பேசப்படுகிறது.
மேலும் அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை அளிப்பது, சீனாவின் 12 அம்ச யோசனை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் பற்றிய சீனாவின் கருத்துகளை புதின் வரவேற்றார். மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதில் விருப்பம் காட்டுவதாகவும் புதின் கூறினார்.
புதின் – ஜி ஜின்பிங்கின் சந்திப்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்தது. இந்த நிலையில் ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நடந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 23-ஆம் தேதி நாடு திரும்புகிறார்.
ராஜ்