குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியாரான ஆசாராம் பாபுவிற்கு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபுவிற்கு பல இடங்களில் ஆசிரமங்கள் இருக்கின்றன.
அங்குள்ள பெண் சீடர்கள் இடையே, சாமியார் ஆசாராம் பாபு அத்துமீறி நடந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2018-ம்ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனிடையே, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001முதல் 2006வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சூரத்தைச் சேர்ந்த பெண் சீடர், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகள் 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என நேற்று(ஜனவரி 31) நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.
அதேநேரம், குற்றம்சாட்டப்பட்ட சாமியாரின் மனைவி, மகன் மற்றும் 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மோனிஷா
டாஸ்மாக் வழக்கு: வருமான வரித்துறை விளக்கமளிக்க உத்தரவு!
”என் பேச்சை வெட்டி, ஒட்டி அவதூறு பரப்புகின்றனர்” : ஈவிகேஎஸ் இளங்கோவன்