பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாளை (செப்டம்பர் 1) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு மார்பகம், கருப்பையை தொடர்ந்து 3வது அதிகமாக காணப்படும் புற்றுநோயாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளது.
இதனால் ஆண்டுக்கு 1,23,907 பெண்கள் பாதிக்கப்படுவதாக கடந்த 2020ம் ஆண்டு GLOBOCAN அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆசியாவிலேயே இந்தியாவில் தான் இந்த புற்றுநோயின் பாதிப்பு விகிதம் (27.7) அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே இதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பொறுத்தவரை, இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது.
அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து கர்ப்பைப்பை வாய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க நம்நாட்டில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கொரோனா தடுப்பு பணிக்குழுவின் தலைவரான டாக்டர் என் கே அரோரா கூறுகையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது ஒரு அற்புதமான அனுபவம்.
நம் நாட்டின் பெண்களுக்கு மிக தேவையாக இருந்த இந்த தடுப்பூசியை இப்போது எளிதாக பெற முடியும் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த தடுப்பூசி,85% முதல் 90% வரை பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பினை தடுக்கிறது.
எனவே பாதிக்கப்பட்ட நம் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து மீள்வர்.
உலக சந்தையில் கர்ப்பப்பை வாய் தொற்றுநோய்க்கான தடுப்புசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நம் தேவைகளை நாமே கவனித்துக் கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.
–கிறிஸ்டோபர் ஜெமா
உலக பணக்காரர் பட்டியல்: 3ஆவது இடத்தில் கவுதம் அதானி – சொத்து மதிப்பு எவ்வளவு?