பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் மீது இன்று (ஜூன் 15) டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரிஜ் பூஷனை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஜூன் 7 ஆம் தேதி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீராங்கனைகளை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது பிரிஜ் பூஷன் மீதான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்த நிலையில் தங்களது போராட்டத்தை தற்போதைக்கு ஒத்தி வைக்கிறோம் என்று மல்யுத்த வீராங்கனைகள் கூறினார்கள்.
இந்நிலையில், பிரிஜ் பூஷன் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி காவல் துறை இன்று (ஜூன் 15) தாக்கல் செய்துள்ளது.
மேலும் , பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட மைனர் மல்யுத்த வீராங்கனையின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதரம் இல்லை என்றும் அதனால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் டெல்லி காவல் துறை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் விசாரணையை பாட்டியாலா வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது பட்டியால நீதிமன்றம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்