பிரதமர் மோடி தலைமையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“டிஜிட்டல் வேளாண் இயக்கம்:
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்:
இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,979 கோடி. இந்த முயற்சி விவசாயிகளை பருவநிலை நெகிழ்திறனுக்கு தயார்படுத்துவதுடன் 2047-ம் ஆண்டுக்குள் உணவு பாதுகாப்பை வழங்கும்.
வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்:
மொத்தம் ரூ.2,291 கோடி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை வேளாண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்படுத்தும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குதல், புதிய கல்விக் கொள்கை 2020, டிஜிட்டல் டிபிஐ, செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், இயற்கை விவசாயம் மற்றும் பருவநிலை நெகிழ்திறனை சேர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது செயல்படும்.
நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி:
மொத்தம் ரூ.1,702 கோடியில், கால்நடைகள் மற்றும் பால் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தோட்டக்கலையின் நிலையான வளர்ச்சி:
மொத்தம் ரூ.1,129.30 கோடி செலவில் இந்த நடவடிக்கை தோட்டக்கலை தாவரங்களிலிருந்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது, வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தோட்டக்கலை பயிர்கள், வேர், கிழங்கு, குமிழ் மற்றும் வறண்ட பயிர்கள், காய்கறி, மலர் வளர்ப்பு மற்றும் காளான் பயிர்கள், தோட்டப்பயிர்கள், மசாலா, மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை உள்ளடக்கியது.
ரூ.1,202 கோடியில் வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல் மற்றும் ரூ.1,115 கோடியில் இயற்கை வள மேலாண்மையை செயல்படுத்தும் வகையில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு… ஆனால்! – கண்டிஷன் போட்ட ஆர்.எஸ்.எஸ்
21 கேள்விகள்! ட்விஸ்ட் வைத்த போலீஸ் – தள்ளாடும் தவெக மாநாடு… குழப்பத்தில் விஜய்?