இந்தியாவின் லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன துருப்புகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்குக் கூடுதலாக 9,400 வீரர்களைப் பணியில் அமர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்குக் கூடுதல் படைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு,
சீனாவை ஒட்டிய எல்லையைப் பாதுகாத்து வரும் இந்தோ – திபெத்தியன் எல்லை போலீஸ் படை (ITBP) பிரிவில் கூடுதலாக ஏழு பட்டாலியன்களை சேர்க்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஒரு பட்டாலியன் என்பது 500 முதல் 1,500 படை வீரர்கள் கொண்ட குழுவாகும், இதன்மூலம், கூடுதலாக 9,400 வீரர்கள் இந்தப் பிரிவில் இணைவார்கள்.
இந்திய – சீன எல்லையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 47 எல்லை நிலைகளிலும், 12 முகாம்களிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன துருப்புகள் குவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
1962இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டதை அடுத்து, இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் படை சுமார் 90,000 வீரர்களைக் கொண்டதாக பலப்படுத்தப்பட்டது.
தற்போது இவர்கள் 3,488 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட எல்லையை பாதுகாத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தப் பகுதியில் கூடுதல் வீரர்களை களத்தில் இறக்கும் நோக்கில் ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
ஆகம குழு : சத்தியவேல் முருகனார் நியமனத்துக்கு இடைக்கால தடை!
சர்வதேச அழைப்பை உள்ளூர் அழைப்பாக மாற்றும் சட்ட விரோத நெட்வொர்க்: சேலம் பகீர்!