உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தராகண்ட், கேரளா, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 5) பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவான பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல்கள் இது என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கோசி தொகுதியிலும், ஜார்கண்டின் டும்ரி, தன்பூர், திரிபுராவின் போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தின் துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளியிலும் ஒருவருக்கொருவர் எதிரணியில் போட்டியிடுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவும், ஓபிசி தலைவருமான தாரா சிங் சவுகான் ராஜினாமா செய்ததை அடுத்து, கோசி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவில் இணைந்துள்ள அவர், அக்கட்சியின் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி சுதாகர் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேற்குவங்கத்தின் துப்குரி சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
2016ஆம் ஆண்டில் திரிணாமூல் காங்கிரஸ் அத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், 2021இல் அந்த தொகுதியை பாஜக கைப்பற்றியது.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவால் புதுப்பள்ளி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் களம் காண்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐபோன் 15 மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கும் கூகுள் பிக்சல் 8 சீரிஸ்!