குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதைமுன்னிட்டு குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
அவரை துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கார், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து இருஅவையின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்த திரௌபதி முர்மு அனைவருக்கு வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.
அப்போது அவர், “இந்தியா தன்னம்பிக்கையில் உச்சத்தில் இருக்கிறது. உலகம் இந்தியாவை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. உலக நாடுகளின் பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வை வழங்கி வருகிறது.
தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஏழை மக்களுக்காக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. பெண்களின் வளர்ச்சிக்காக அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவின் பெரிய வளர்ச்சிக்கான கனவுகளை மத்திய அரசு கொண்டிருக்கிறது. 2047ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை, பொற்கால இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் பங்கு இருக்க வேண்டும்.
காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல்வேறு விவகாரங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது.
ஊழல் என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அடிப்படை வசதிகள் அவர்களை நோக்கிச் செல்கின்றன. இதனால் அவர்களால் புதிய கனவு பாதையில் பயணிக்க முடிகிறது.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்கள் பசியாறப் பிரதமரின் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா கையாண்ட விதத்தைப் பார்த்து உலகமே பாராட்டியது” என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
பிரியா–
நாதகவில் சேர திருமகன் ஈவெரா சென்றாரா? சீமானுக்கு ஜோதிமணி பதில்!