பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறையில் அடைக்க வலியுறுத்தி பில்கிஸ் பானுவின் சொந்த ஊரான ராதிக்பூர் கிராமத்திலிருந்து மக்கள் அனைவரும் தேவத்பாரியா என்ற கிராமத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில், 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 25) இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பில்கிஸ் பானு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது கிராமத்திலிருந்து வெளியேறி வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகள் அனைவரையும் மீண்டும் சிறையில் அடைக்கும் வரை நாங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தற்போது அவர்கள் அனைவரும் ராதிக்பூர் கிராமத்திலிருந்து, தேவத்பாரியா என்ற கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
பில்கிஸ் பானு குடும்பத்தினரும் தேவத்பாரியா கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.
ராதிக்பூரிலிருந்து தேவத்பாரியா சென்றுள்ள சமீர் காச்சி கூறும்போது, “11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து முதலில் எங்களுக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அவர்கள் வீடு திரும்பியதும், பட்டாசு வெடித்தும் ஆடல் பாடல்களுடன் கொண்டாடினர்.
அப்போது தான் எங்கள் வாழ்வு குறித்த பயம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் அனைவரும் எங்கள் சொந்த கிராமமான, ராகித்பூரிலிருந்து, தேவத்பாரியாவிற்கு இடம்பெயர்ந்து விட்டோம்.
குற்றவாளிகளான அவர்கள் எப்படி தங்களது விடுதலையை பட்டாசு வெடித்தும் டிஜே பாடல்கள் இசைத்தும் கொண்டாட முடிகிறது?
குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்லும் வரையில் நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பப்போவதில்லை” என்றார்.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, தாகூத் மாவட்ட ஆட்சியரிடம் 55 பேர் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
மனித குலத்திற்கு அவமானம்: பில்கிஸ் பானு வழக்கு குறித்து குஷ்பு