பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 29) உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பக்ரீத் பண்டிகை ’தியாக திருநாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.
அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காஷ்மீர் முழுவதும் கன்னியாகுமரி முதல் நாடு முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்கள் காலையில் மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.
டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் இருக்கும் பஞ்சா ஷெரீப் தர்காவில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தொழுகையில் ஈடுபட்டார். இந்த தொழுகையை தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பழமை வாய்ந்த ஜமா மசூதி, ஃபதேபுரி ஆகிய மசூதிகளிலும் தொழுகை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி திடலில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை செய்தனர்.
கோவையில் கரும்புக்கடை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது. கரும்புக்கடை பள்ளிவாசலில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கூடி தொழுகை செய்து அன்பை வெளிப்படுத்தினர்.
திருச்சியில் தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை பகுதியில் தொழுகை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் களைகட்டியுள்ளது.
பிரியா