முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்!
நாட்டின் முப்படை தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான், மத்திய அரசால் இன்று (செப்டம்பர் 28) நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாகப் பிபின் ராவத், 2019ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்குப் பிறகு, கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, முப்படை தலைமைத் தளபதி பதவி காலியாகவே இருந்தது.
இந்த நிலையில்தான், ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை, நாட்டின் இரண்டாவது முப்படை தலைமைத் தளபதியாக மத்திய அரசு இன்று (செப்டம்பர் 28) நியமித்திருக்கிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், பல துறைகளில் பணியாற்றி உள்ளர்.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் விரிவான அனுபவம் பெற்றவர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
யார் இந்த அனில் சவுகான்?
1961ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், 1981இல் இந்திய ராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.
அவர் மேஜர் ஜெனரல் பதவி வகித்தபோது வடக்கு மண்டல பாரமுலா பிரிவில் இருக்கும் காலாட்படைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் வடகிழக்கில் ஒரு படைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு, செப்டம்பர் 2019 முதல் கிழக்கு மண்டல கட்டளையின் தலைமைத் தளபதியாக பதவி வகித்தார். மே 31, 2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை இந்தப் பொறுப்பை வகித்தார்.
இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் அனில் சவுகான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் விரிவான அனுபவத்தைப் பெற்றவர்.
அதுமட்டுமின்றி, அனில் சவுகான், கடக்வாஸ்லாவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனிலுள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார்.
அனில் சவுகான், இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தேசிய பாதுகாப்பு மற்றும் நலனில் அவர் தொடர்ந்து பங்களித்து வந்தார்.
இராணுவத்தில் அவரது புகழ்பெற்ற சேவைக்காக பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
ராகுலைக் கண்ட மகிழ்ச்சியில் கதறியழுத மாணவி!
ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு: ஆதாரங்களை அடுக்கிய மத்திய அரசு!