முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவருக்கும் நேற்று (டிசம்பர் 29) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய இரண்டு மகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர்.
ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிவடைந்த நிலையில், இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் ஆனந்த் மற்றும் ராதிகா இணையரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை தொடர்ந்து முகேஷ் அம்பானி மும்பை ஆண்டிலியாவில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜான்வி கபூர் மற்றும் அயன் முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ராதிகா என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பு குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவர்களது திருமண தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
செல்வம்
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஷுக்கு ஆசி தந்த தில்லாலங்கடி சாமியார்!