வரிசை கட்டும் பண்டிகைகள்: அதிகரிக்கும் விமானக் கட்டணங்கள்!

Published On:

| By Monisha

இந்தியாவில் இனிவரும் நாட்களில் தொடர்ந்து பண்டிகைகள் வரும் நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பண்டிகை விடுமுறை காலங்களில் விமானச் சுற்றுலா செல்பவர்கள் முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுகின்றனர்.

சுற்றுலா முகவர்கள், ஐ.ஆர்.சி.டி.சி போன்ற ஏற்பாட்டாளர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்கிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி வருகிறது. அதனால் 10 முதல் 16ஆம் தேதி வரை உள்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமானக் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா உள்ளிட்ட பல நகரங்களுக்கு விமானக் கட்டணம் அதிகரித்துள்ளது.

விமானங்களில் இடங்களும் நிரம்பிவிட்டன. மும்பை – டெல்லி ஒருவழி விமானக் கட்டணம் சராசரியாக ரூ.6,876. ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.8.788 ஆக 27.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இதேபோல் புனே – டெல்லி விமானக் கட்டணம் கடந்த தீபாவளியை விட தற்போது 44.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்னை-கொல்கத்தா ஒரு வழி கட்டணம் ரூ.6,815-ல் இருந்து ரூ.8,725 ஆக உயர்ந்துள்ளது. இது 28 சதவிகிதம் உயர்வாகும்.

பெங்களூரு – பெங்களூரு – கொல்கத்தா ஒரு வழி விமானக் கட்டணம் ரூ.10,195 ஆக அதிகரித்துள்ளது. இது 40 சதவிகிதம் உயர்வாகும்.

இதுகுறித்து பேசியுள்ள டிஎம்சி லீசர் (DMC Leisure) டிராவல் ஏஜென்சி இயக்குநர்,

“இந்தியாவுக்குள் உள்ள நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமானப் பயணம் தற்போது அதிகரித்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்கு கோவா, அந்தமான், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் தாய்லாந்து, அரபு நாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால் அதற்கேற்ற அளவு இருக்கைகள் இல்லை. பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.

இதேபோல் கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகளுக்குச் செல்ல விமானத்தில் இடங்கள் இல்லை. இதனால் கட்டணம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை வெளிநாட்டு விமானங்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. அந்தமானுக்குச் செல்பவரும் அதிகரித்து வருகின்றனர். இதனால் கட்டணமும் உயர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்போதே முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஒரு சில நாடுகளுக்கு செல்ல விமானத்தில் இடம் இல்லை. இதேபோல் தாய்லாந்துக்கு பயணம் செய்வோர் அதிகமாக இருப்பதால் இரு மடங்காக கட்டணம் அதிகரித்துள்ளது.

புத்தாண்டு வரை விமானங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுப் பொங்கல்

லியோ லீக்… ஏன் ஷாக்? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel