அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள கூடுதல் வரி விதிப்பு, உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிரானது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகளுக்குக் கூடுதல் வரிவிதிக்கும் டிரம்ப்பின் இந்த முடிவு, அந்நாட்டு நிர்வாகம் நம்புவதைப் போன்று அமெரிக்காவுக்கு பலனளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன் என்றும் அரசின் அதிகாரங்களும், வரிகளும் குறைக்கப்படும், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு 10-20 சதவிகித வரி விதிக்கப்படும், குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றதும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அமெரிக்கா்களின் நலனுக்காக, வெளிநாடுகளுக்கு மேலும் கூடுதலாக வரி விதிப்போம்; இறக்குமதி வரிகளை அதிகரிப்போம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ்நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டபோது, டிரம்பின் கூடுதல் வரிவிதிப்பு குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ’’டிரம்ப் நிர்வாகத்தின் கூடுதல் வரி விதிப்பானது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைக்கான ஆதாரமாக மாறும் என நினைக்கிறேன்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இதில், அவர்கள் பலனடைவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் பொருட்கள் அமெரிக்காவுக்கு வெளியே உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளாவிய வரி விதிப்பு அமலுக்குக் கொண்டு வரப்பட்டால், மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வது தடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இது அமெரிக்காவில் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். அதுவும் அதிக கட்டணத்தில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும்.
உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக சீனா போன்ற பெரிய நாடு, வியட்நாம் போன்ற சிறிய நாட்டிடமிருந்து உற்பத்திக்கான பொருட்களைப் பெறுகின்றன. இது பெரிய அளவில் உற்பத்தி செலவைக் குறைக்கும். வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும்.
ஒரே இரவில் கூடுதல் வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டால், எங்கே முதலீடு செய்வது என்ற நிச்சயமற்றத் தன்மை ஏற்படும். இது உலகளவில் வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும். கூடுதல் வரிவிதிப்பானது, கூடுதல் வருவாய்க்கான ஆதாரமாகவும் கூடுதல் வேலைவாய்ப்புக்கான ஆதாரமாகவும் மாறும் என அதிபர் டிரம்ப் நினைத்துக்கொண்டிருக்கிறார்’’ எனக் கூறியுள்ளார்.