அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளிலும் பரவி தொடர்ந்து அணைக்க முடியாமல் எரிந்து வரும் நிலையில் தற்போது பலத்த காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேரழிவை எதிர்நோக்கி பதற்றத்தில் இருக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸ்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த எட்டு மாதங்களாக வறட்சி நிலவியது. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் காட்டுத்தீ நான்கு நாட்களில் மளமளவென பரவி 40,000 ஏக்கர் அளவுக்கு பரவியது. தண்ணீர் மற்றும் ரசாயனங்களை எடுத்துச் சென்ற தீயணைப்பு விமானங்களும், சூறாவளி காற்றின் காரணமாக காட்டுத் தீ பரவிய பகுதிக்குள் செல்ல முடியவில்லை.
தீயணைப்புத் துறையின் 7,500 வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் உள்ளூர்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீரை, நீண்ட நேரம் பயன்படுத்தி காட்டுத்தீயை அணைக்க முயன்றனர். இவர்களால் ஓரளவுக்குத்தான் காட்டுத் தீயை அணைக்க முடிந்தது. தொடர்ந்து பரவும் இந்தக் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோடீஸ்வரர்கள் தங்களது சொத்துகளை பாதுகாக்க தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். தனியார் தீயணைப்புப் படையினர் 24 மணி நேரமும் அங்கு நின்று, கட்டடங்களை தீப்பிழம்புகள் அணுகும்போது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் அந்தக் கட்டடங்கள் தண்ணீரால் நனைந்து விடுகின்றன. இதனால் அந்த சொகுசு வீடுகள் மீது தீ பரவாமல் தடுக்கப்படுகிறது.
தற்போது பலத்த காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ‘அனைத்து அவசர ஏற்படுகளும் தயாராக உள்ளன’ என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பிங்க் பொடி தூவி தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரோஜா வண்ணத்தில் உள்ள இந்த வேதியியல் கலவையானது, பொருட்கள் மீது தூவப்படுவதால் அந்த பொருட்களில் தீப்பற்ற நேர்ந்தால் அப்போது இந்த பிங்க் பொடி காற்றிலிருக்கும் ஆக்ஸிஜன் வாயுவை வேதியியல் மாற்றத்தால் தடுத்துவிடுவதால் தீப்பற்ற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சலீஸில் பிங்க் பொடி தூவப்பட்டு வருகிறது.
தீ பற்றாமல் தடுக்கும் இந்த வேதியியல் கலவையில் அமோனியம் பாலிபாஸ்பேட் முக்கிய மூலப்பொருளாக கலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தரை வழியாகச் சென்று தீயை அணைக்க முடியாத பகுதிகளில் மேற்கண்ட பொடி, வானிலிருந்து தூவப்படுவதால் தீ பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரோடு கிழக்கு : பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்… யார் இந்த சீதாலட்சுமி?