டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜராக உள்ளதால் சிபிஐ அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
டெல்லியில், மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்குப் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்டு 3 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் சிபிஐ சோதனை நடத்தியது. பின்னர் அவர் பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது சிபிஐ.
ஆனால் டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி நிதியமைச்சர் பட்ஜெட்டை தயாரித்து வருவதால், நேரமின்மையைக் காரணம் காட்டி மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரக் காலம் அவகாசம் கேட்டிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று சிபிஐ, விசாரணைக்கு ஆஜராவதற்கு அவகாசம் வழங்கியது. அதன்படி இன்று (பிப்ரவரி 26) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் மணீஷ் சிசோடியா.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகம் அமைந்திருக்கும் லோதி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனிடையே மணீஷ் சிசோடியா வீட்டிற்கு முன்பும் சிபிஐ அலுவலகத்திற்கு முன்பும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
மோனிஷா
எந்த சூரியனும் நிறுத்த முடியாது! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி