ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்ட நியூசிலாந்து!

Published On:

| By Balaji

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரண்டு போட்டிகளை இந்திய அணி அபாரமாக கைப்பற்றிள்ளது. தற்போது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இன்னிங்ஸை துவங்கிய கே.எல்.ராகுல், தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் அரைசதங்களை அடித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக களமிறங்கிய எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தது கிடையாது. அதன்படி இந்த சாதனையை நிகழ்த்திவர்களில், கே.எல்.ராகுலே முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.

ADVERTISEMENT

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை நியூசிலாந்து அணி செல்வதற்கு உறுதுணையாக இருந்தது, களத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் இருந்த ஃபீல்டர்கள் தான். ஆனால் தற்போது நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி சரியாக கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பென்னட் வீசிய 6-ஆவது ஓவரில், கே.எல்.ராகுல் கவர்ஸ் திசையை நோக்கி பந்தை அடித்தார். ரன் எடுப்பதற்கு கே.எல்.ராகுல் முன்வராத நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரன் எடுப்பதற்கு களத்தின் பாதி தூரம் வரை வந்துவிட்டார். பிறகு கே.எல்.ராகுலும் ரன் எடுப்பதற்கு ஓடினார்.

ADVERTISEMENT

ஃபீல்டர் கையில் பந்தை எடுத்துக்கொண்டு ரன்-அவுட் செய்ய முயற்சித்திருந்தாலே, கே.எல்.ராகுலை அந்த போட்டியில் குறைந்த ரன்களுக்கு வெளியேற்றியிருக்கலாம். அந்த ஒரே பந்தில் தொடர்ச்சியாக இரண்டு ரன்-அவுட் வாய்ப்புகளை நியூசிலாந்து அணி தவறவிட்டது. அதன் பிறகு கே.எல்.ராகுல் 56 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இது அடுத்த போட்டியிலும் தொடர்ந்தது.

ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் டி20 போட்டியிலும் டிக்கனர் வீசிய 14ஆவது ஓவரில் இதே போன்று ரன்-அவுட் வாய்ப்பை நியூசிலாந்து அணி தவறவிட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் கவர்ஸ் திசை நோக்கி அடித்த பந்தில், கே.எல்.ராகுல் ரன் எடுப்பதற்கு களத்தின் பாதி தூரம் வரையில் ஏறி வந்தார். ஃபீல்டரிடம் பந்து அகப்பட்ட நிலையில் கே.எல்.ராகுல் தான் அவுட் ஆவது உறுதி என நினைத்து, களத்தில் செய்வதறியாமல் நின்றார்.

ADVERTISEMENT

ஆனால் முதல் முயற்சி ஸ்டம்புகளில் படாமால் சென்றவுடன், கே.எல்.ராகுல் தன்னுடைய விக்கெட்டை காப்பாற்றுவதற்கு டைவ் அடித்தார். அதற்குள் இரண்டாவது முயற்சியை செயல்படுத்திய நியூசிலாந்து அணி அந்த வாய்ப்பையும் தவறவிட்டது. அந்த போட்டியில் கே.எல்.ராகுல் 57 ரன்களை குவித்தார்.

இவ்வாறு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் கே.எல்.ராகுலின் விக்கெட்டை, நியூசிலாந்து அணி தவறவிட்டதால் அந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share