இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நவம்பர் 12 முதல் 16 க்குள் விண்ணில் செலுத்தப்படும் என ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்று (நவம்பர் 8 ) தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது.
‘பிரரம்ப்’ ( ஆரம்பம் ) என பெயரிடப்பட்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் முதல் பணியானது, மூன்று விதமான பேலோடுகளை சுமந்து செல்லும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

இந்திய விண்வெளித் துறைக்கு புதிய சகாப்தம்
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனர் பவன் குமார் சந்தனா கூறுகையில் “காலநிலையைப் பொறுத்து நாங்கள் தயாரித்துள்ள ராக்கெட் வரும் 12 முதல் 16 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். இந்தியாவில் முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துவது இதுதான் முதல்முறை.
விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களும் வரலாம் என்று 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தபின் விண்வெளித்துறைக்கு புதிய சகாப்தம் பிறந்துள்ளது. விக்ரம்-எஸ் ராக்கெட் சிங்கிள் ஸ்டேஜே் ராக்கெட்டாகும்.
விக்ரம் சாராபாய்க்கு மரியாதை
இதில் 3 விதமான பேலோட் உள்ளன. மிகக்குறுகிய காலத்தில் ஸ்கைரூட் இதை தயாரித்துள்ளது, எங்களுக்கு இஸ்ரோ நிறுவனமும், என் ஸ்பேஸும் சிறந்த ஆதரவை அளித்தனர். நாங்கள் அனுப்பும் முதல் ராக்கெட்டை இஸ்ரோவின் நிறுவனரான விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக அனுப்புகிறோம்.

ஸ்கைரூட் நிறுவனம், வர்த்தகரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. விலைகுறைவான செயற்கைக்கோள்களை, குறைந்த செலவில் அனுப்பவதற்கு ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவும் ” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்