சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும் செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய செல்போன் விற்பனை சந்தையாக இந்தியா திகழ்கிறது.
இந்தியாவின் சந்தைகளில் சீன நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான ஜியோமி, போகோ, ரியல்மி, ஓப்போ, விவோ மற்றும் வேறு சில நிறுவனங்களும் குறைந்த விலையில் அதிநவீன வசதிகளுடன் செல்போன்களை விற்பனை செய்வதால் இந்த நிறுவனங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கிடைத்து வருவதுடன் இந்திய சந்தைகளில் பெரும் ஆதிக்கத்தையும் இந்த நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.
இதன் காரணமாக பெருமளவில் சீனாவின் செல்போன்களை இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சூழல் நிலவுவதுடன் இந்திய செல்போன் நிறுவனங்கள் பெரும் இழப்பையும் சந்தித்து வந்தன.
ஜூன் 2022 வரையிலான காலாண்டில், சீன நிறுவனங்கள் 80 சதவிகிதம் ஏற்றுமதிகளைக் கொண்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதைத் தடுப்பதுடன் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே,கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனாவின் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததுடன் சீனாவின் முதலீட்டுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
கடந்த மாதத்தில் சீனாவைச் சேர்ந்த விவோ, ஓப்போ நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- க.சீனிவாசன்
