இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்தப் போட்டியில் விளையாடவில்லை. கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஜோடியாக களமிறங்கிய கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. இதையடுத்து மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, அடுத்தடுத்து வந்த புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ராகுல் 50, பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஸ்வின் நிதானமாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகமது ஷமி 9, பும்ரா 14, சிராஜ் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராபாடா, ஆலிவியர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டீன் எல்கார் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா சார்பில் முகமது ஷமி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா அணி 167 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் இன்று (ஜனவரி 4) இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
**-ராஜ்**
.
