தனது அநாகரிக பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளிக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நடிகை திரிஷாவிடமிருந்து வெளியே வரவேண்டும் என்று அநாகரிகமாக பேசியிருந்தார்.
இதனால் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தவெக மட்டுமின்றி, திமுக, அமமுக, காங்கிரஸ், தமாகா, விசிக என பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தவெக பரப்புரைச் செயலாளர் நஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.
அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?
4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?
முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இப்படி கண்டனங்கள் அதிகரித்து வரும் நிலையில் தனது பேச்சுக்கு விளக்கமோ, வருத்தமோ இதுவரை நயினார் நாகேந்திரன் தெரிவிக்கவில்லை.
எனினும் சென்னையில் அவரிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. மாறாக சிரித்துக்கொண்டே தனது கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அதுபோன்று பாஜக பெண் தலைவரான தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர், ‘வந்து பேசுகிறேன்’ என்று பதிலளிக்காமல் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
