அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை கோலாகலமாக கொண்டாட, மொத்த இந்தியாவுமே தயாராகி வருகிறது. கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி பாலிவுட்டில் ‘பிக் பி’ அமிதாப் பச்சன் வரை பல பிரபலங்கள் இன்றைய போட்டியை நேரில் காண அகமதாபாத் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த போட்டிக்கு முன்னதாக, அர்ஜித் ஜிங், சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் அடங்கிய ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில், விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான், இன்று தங்களது 3வது வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளது.
ஒரு சுவாரஸ்ய தகவலாக, ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில், பாகிஸ்தானை 7 முறை சந்தித்துள்ள இந்தியா, ஒரு முறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. இந்நிலையில், இந்த போட்டியில் 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா அந்த வரலாற்றை தொடருமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியா vs பாகிஸ்தான் – கடந்துவந்த பாதை
1992 – சிட்னி
இந்த போட்டியில், இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பேட்டிங்கில் 54 ரன்கள், பந்துவீச்சில் 1 விக்கெட் என அசத்திய சச்சின் டெண்டுல்கர் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
1996 – பெங்களூரு
இந்த போட்டியில், 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. 93 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட நவ்ஜோத் சிந்துவுக்கு ‘ஆட்ட நாயகன்’ விருது வழங்கப்பட்டது.
1999 – மான்செஸ்டர்
இந்த ஆட்டத்தில், இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கியது. பந்துவீச்சில் மிரட்டி, 5 விக்கெட்களை கைப்பற்றிய வெங்கடேஷ் பிரசாத், இந்த போட்டியின் நாயகன் ஆனார்.
2003 – செஞ்சுரியன்
இந்த போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை, 6 விக்கெட்கள் மீதமிருந்த நிலையில் இந்தியா எட்டியது. 75 பந்துகளில் 98 ரன்கள் என ருத்ர தாண்டவம் ஆடிய சச்சின் டெண்டுல்கர் மீண்டும் ஒருமுறை ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
2011 – மொஹாலி
யாரும் மறக்கமுடியாத இந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்தியா vs பாகிஸ்தான் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில், 3வது முறையாக ‘ஆட்ட நாயகன்’ விருது வென்றார், சச்சின். இந்த போட்டியில் அவர் 85 ரன்கள் குவித்திருந்தார்.
2015 – அடிலெய்டு
இந்த போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இமாலய வெற்றியை பதிவு செய்தது இந்தியா. இந்த போட்டியில், இந்தியா vs பாகிஸ்தான் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில், முதல் முறையாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி, ‘ஆட்ட நாயகன்’ விருதையும் வென்றார்.
2019 – மான்செஸ்டர்
இந்த போட்டியில், டக்வர்த் – லூயில் முறைப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு இமாலய வெற்றியை பெற்றது இந்தியா. 113 பந்துகளில் 140 ரன்கள் என பாகிஸ்தான் அணியை திணறவிட்ட ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி