பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தெலங்கானாவில் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சை முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் இந்த மயோனைஸ் வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.
இதனிடையே, ஐதராபாத் அருகே கைரதாபாத் பகுதியில் வசித்து வந்த ரேஷ்மா பேகம் என்ற 33 வயதான பெண் சாலையோர கடையில் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பலியானார். அவருடன் 50 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடைக்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக தெலங்கானாவில் ஃபுட் பாய்சன் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. பலரும் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உபாதைகளின் பின்னால் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக தெலங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த இரு தினங்களில் அதாவது கடந்த 30ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு தெலங்கானா அரசு மையோனைஸை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிகரிக்கும் பலி… மயோனைஸ் விற்பனைக்கு தெலங்கானா அரசு அதிரடி தடை!
”தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் ஏன் தயக்கம்?”: ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி?
Comments are closed.