மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்ப அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டெல்டா பாசன பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வந்ததால் கடந்த 26ஆம் தேதி இரவு முதல் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வந்த மழை நின்றது. இதன் காரணமாக பாசனத்துக்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு நேற்று முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது விநாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் தேதி அணைக்கு நீர்வரத்து 34,000 கன அடியாக இருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்து நேற்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 22,942 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
அணைக்கு நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரும் நாட்களில் குறைய தொடங்கும் என்று தெரிகிறது.
**-ராஜ்**
