எட்டாம் நாள் ரெய்டு: கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆவணங்கள் பறிமுதல்!

Published On:

| By christopher

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை எட்டாவது நாளாக இன்றும் (ஜூன் 2) தொடர்கிறது.

செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை ஆகிய 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் 26ஆம் தேதி வருமான வரித்துறை ரெய்டு ஆபரேஷனை தொடங்கியது.

கரூரில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் முற்றுகையிடப்பட்ட நிலையில் அவர்கள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. இதனால் சோதனையை கைவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் நேற்று 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக சொல்லப்படும் கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவரது அலுவலகத்தில் இருந்து இன்று இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளது பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள்‌ எடுத்துச்‌ சென்ற இரண்டு பெட்டிகளில்‌ சொத்து ஆவணங்கள்‌ உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்‌ இருக்கிறதா என்ற கேள்வி கரூரில் எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

’தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடகா பறிப்பதை ஏற்க முடியாது’: வைகோ கண்டனம்!

உருவாகும் இன்னொரு பிரம்மாண்டம்…கலைஞர் கன்வென்ஷன் சென்டர்….ஸ்டாலின் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share