அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற வருமானச் சான்றிதழ் (Income Certificate) அவசியம். ரேஷன் கார்டு, ஆயுஷ்மான் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போல, பல அரசுத் திட்டங்களில் பணம் அல்லது இலவச உதவிகளைப் பெற வருமானச் சான்றிதழ் தேவைப்படுகிறது. இது ஒரு நபரின் அல்லது குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அரசு ஆவணமாகும். இதை தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வருவாய் அலுவலர் போன்றோர் வழங்குவார்கள். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் இதை எளிதாகப் பெறலாம்.
வருமானச் சான்றிதழ் எதற்குப் பயன்படுகிறது?
அரசு வழங்கும் பணப் பரிசுகள் மற்றும் இலவசத் திட்டங்களின் உதவிகளைப் பெற இது தேவைப்படுகிறது. அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பெறவும் இது அவசியம். வங்கிகளில் கடன் வாங்கச் செல்லும்போதும், வருமானச் சான்றிதழ் கேட்பார்கள். மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறவும் இந்தச் சான்றிதழ் வேண்டும். வீடு வாடகைக்கு எடுக்கும்போதும் சில வீட்டு உரிமையாளர்கள் இதைக் கேட்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் (BPL) உள்ளவர்களுக்கான ரேஷன் கார்டு பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம்.
வருமானச் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதார் கார்டு (Aadhaar), வாக்காளர் அடையாள அட்டை, மின்சாரக் கட்டண ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.
வருமானச் சான்றிதழைப் பெறுவது எப்படி?
இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, உங்கள் மாநிலத்தின் இ-டிஸ்ட்ரிக்ட் இணையதளத்தில் உள்நுழைந்து அல்லது புதிய கணக்கு தொடங்கி, வருமானச் சான்றிதழ் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு ரசீது கிடைக்கும். அதைக் கொண்டு உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்த்து, எல்லாம் சரியாக இருந்தால் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் அருகில் உள்ள துணை ஆட்சியர் அலுவலகம் (SDM office) அல்லது பொது சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, தகவல்கள் சரியாக இருந்தால், வருமானச் சான்றிதழ் வழங்கப்படும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எந்த முறையில் விண்ணப்பித்தாலும், இந்தச் சான்றிதழைப் பெற எந்தக் கட்டணமும் இல்லை. இது முற்றிலும் இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
