அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சூமோட்டோ வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரை விடுவித்தன.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது, வருமானத்திற்கு அதிகமாக 44.59 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் நாளைக்குள் பதில் அளிக்கவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது.
இவர் மீதான வழக்கு வரும் பிப்ரவரி 5 முதல் 9ஆம் தேதி வரை தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தன் மீது பதியப்பட்ட சூமோட்டோ வழக்கை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இன்று (ஜனவரி 29) ரிஷிகேஷ் ராய் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவு செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடர்பான வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?” என சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கேள்வி எழுப்பினார்.
மேலும், முடித்துவைக்கப்பட்ட வழக்கைத் தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் மறு விசாரணை செய்வது நீதிமன்றத்தைப் பாதிக்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை பதிவு செய்யத் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது குறித்து பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே : சிவசங்கர்
