தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, “ஏ கங்கை அம்மா” பாடலுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த பாடலை பிரதமர் மோடி கை தட்டி ரசித்து கேட்டார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் ‘கங்கா மையா’ நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது.
இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது! பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். எனவே, இந்தக் கலாச்சாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது” என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
மோடி தென்னாப்பிரிக்கா பயணம் ஏன்?
தென்னாப்பிரிக்கா செல்லும் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், “தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.
ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால், ஒரு சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். 2023-ம் ஆண்டில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் உறுப்பினராகியது.
இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி20-ன் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை’ ஆகும். இதன் மூலம் இந்தியாவின் புதுதில்லி, பிரேசிலின் ரியோ- டி -ஜெனிரோவில் நடைபெற்ற முந்தைய உச்சிமாநாடுகளின் முடிவுகளை தென்னாப்பிரிக்கா முன்னெடுத்துச் சென்றுள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ மற்றும் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்’ என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியாவின் பார்வையை இந்த உச்சிமாநாட்டில் முன்வைப்பேன்.
மாநாட்டில் பங்கேற்கும் பிற நாடுகளின் தலைவர்களுடனான எனது உரையாடல்களையும், உச்சிமாநாட்டின் போது திட்டமிடப்பட்டுள்ள 6-வது இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடனான எனது உரையாடலையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என கூறியிருந்தார்.
