ADVERTISEMENT

2025-ல் மாவோயிஸ்டுகள் 270 பேர் சுட்டு கொலை- 680 பேர் கைது- 1,225 பேர் சரண்- மத்திய அரசு

Published On:

| By Mathi

Maoists

2025-ம் ஆண்டு மட்டும் மாவோயிஸ்டுகள் இயக்கத்தைச் சேர்ந்த 270 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 1,225 பேர் சரணடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்பு, மேம்பாடு, மறுவாழ்வு போன்ற ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் மத்திய அரசு நக்சல் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, அதற்கு மாறாக, பேச்சுவார்த்தைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. மார்ச் 2026 – க்குள் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் நக்சல் பயங்கரவாத செயல்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த அணுகுமுறை சட்ட அமலாக்க செயல்திறன், திறன் மேம்பாடு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் வாயிலாக, எதிர்வினையாற்றும் கட்டுப்பாட்டு முறையிலிருந்து முன்கூட்டியே பயங்கரவாத செயல்களை ஒடுக்குவதற்கான முன்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கடந்த பத்தாண்டு காலத்தில், பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் நக்சல் பயங்கரவாத செயல்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.

ADVERTISEMENT

2004–2014 மற்றும் 2014–2024 ஆண்டுகளுக்கு இடையில், வன்முறை சம்பவங்கள் 16,463 – லிருந்து 7,744 – ஆகவும், பாதுகாப்புப் படை வீரர்களின் வீர மரணங்கள் 1,851 – லிருந்து 509 ஆகவும், பொதுமக்களின் உயிரிழப்புகள் 4,766 – லிருந்து 1,495 – ஆகவும் குறைந்துள்ளது.

இது நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் நிர்வாகத்தை மீட்டெடுப்பதற்கான குறிப்பிடத்தக்க அறிகுறியாகும்.

ADVERTISEMENT

2025 – ம் ஆண்டில் மட்டும், பாதுகாப்புப் படையினர் 270 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்துடன், 680 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 1,225 பயங்கரவாதிகள் சரணடைந்தனர். பயங்கரவாத செயல்களை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதுகாப்பு படையினரிடம் சரணடையச் செய்வதன் மூலம் அவர்களை வளர்ச்சியின் மைய நீரோட்டத்தில் இணைவதற்கான நம்பிக்கையை உருவாக்கின.

பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தியது. கடந்த பத்தாண்டுகளில், 576 வலிமை வாய்ந்த காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் 336 புதிய பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன.

2014 – ல் 126 ஆக இருந்த நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, 2024 – ம் ஆண்டில் 18 ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது, 6 மாவட்டங்கள் மட்டுமே நக்சல் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share