இந்திய அரசியல் சாசனத்தின் 124 மற்றும் 217 ஆகிய பிரிவுகள், நீதிபதிகளுக்கு எதிரான இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவர வகை செய்கிறது.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக ‘இந்தியா கூட்டணி’ எம்.பி.க்கள் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று (டிசம்பர் 9) வழங்கினர். மொத்தம் 107 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடத்தையானது
- நடுநிலைமை
- வெளிப்படைத்தன்மை
- நீதித்துறையின் மதச்சார்பற்ற செயல்பாடு ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
- குறிப்பிட்ட ஜாதி வழக்கறிஞர்களுக்கு தேவையற்ற அதீதமான சலுகைகளை வழங்குகிறார்.
- அரசியல் சித்தாந்த அடிப்படையில் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குகிறார். இது மதச்சார்பின்மைக்கு எதிரானது.
இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி, “சமூக ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கிலும், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டுவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரிய தீர்மான நோட்டிஸை, இந்தியா கூட்டணி எம்.பி.களுடன் இணைந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கினோம்” என்றார்.
அடுத்து என்ன நடக்கும்?
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இந்த இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை ஏற்றுக் கொண்டால்
- உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- சட்ட வல்லுநர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும்.இக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் இம்பீச்மெண்ட் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
இம்பீச்மெண்ட் தீர்மானத்துக்கு 3-ல் 2 பங்கு எம்.பிக்கள் ஆதரவு தேவை. அப்படி ஆதரவு கிடைத்து இம்பீச்மெண்ட் தீர்மானம் நிறைவேறினால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பதவி விலகுவார்.
