பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்க IMF ஒப்புதல்- வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

Published On:

| By Minnambalam Desk

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் அமெரிக்கா டாலர் கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. IMF Approves 1 Billion Loan to Pakistan

இந்தியாவுக்கு எதிராக இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தி வருகிறது பாகிஸ்தான். இந்த அத்துமீறல்களுக்கு இந்தியாவும் கடுமையான பதிலடி தந்து வருகிறது.

இந்த போர்ச்சூழலில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம், பாகிஸ்தான் கடன் கோரியிருந்தது. பொதுவாக சர்வதேச நாணய நிதியமானது, நாடுகளுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக உறுப்பு நாடுகளின் கருத்தை கேட்கும்; வாக்கெடுப்பு நடத்தும்.

பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குவதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கான இத்தகைய கடன் தொகையானது ராணுவம் மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவுவதற்கு பயன்படும் அபாயம் இருக்கிறது; பாகிஸ்தான் தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்காமல் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தையே நம்பிக் கொண்டிருக்கிறது என இந்தியா தமது கருத்தை ஆழமாகப் பதிவு செய்தது. மேலும் பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்கக் கூடாது என வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது இந்தியா.

இருப்பினும் பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்க ஆதரவு தெரிவித்தன. இதனால் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. IMF Approves 1 Billion Loan to Pakistan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share