‘நானும் பீப் சாப்பிடுபவன் தான்’: அமைச்சர் விளக்கம்!

Published On:

| By Kalai

சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு இல்லாதது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று(ஆகஸ்ட் 12) உணவுத்திருவிழா தொடங்கியிருக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 நாட்களுக்கு இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022′ என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர்.

உணவுத் திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால், இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கேட்காததால் அரங்கு அமைக்கப்படவில்லை” என்றார்.

ADVERTISEMENT

அரசு நடத்தும் உணவுத் திருவிழாக்களில் மாட்டிறைச்சியை தவிர்க்கக் கூடாது என மாநில ஆதிதிராவிடர், பழங்குடி ஆணையம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் கடந்த மே மாதம் ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர அனைத்து பிரியாணி வகைகளும் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பான புகாரை விசாரித்த எஸ்.சி – எஸ்.டி ஆணையம் இனிவரும் உணவுத் திருவிழாக்களில் மாட்டிறைச்சியை புறக்கணிக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் தொடங்கியிருக்கும் உணவுத்திருவிழாவில் பீப் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலை.ரா

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share