கலாஷ் குப்தா என்னும் டெல்லி ஐஐடி மாணவர் டிசிஎஸ் நிறுவனம் நடத்தும் கோட்விட்டா போட்டியில் வென்று 10000 டாலர்கள் பரிசு பெற்றுள்ளார். இந்த ஆண்டு நடந்த கோட்விட்டா 10ஆவது சீசனில் டெல்லி ஐஐடியில் 87 நாடுகளில் இருந்து 1 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கம்ப்யூட்டர் புரோகிராமிங் கோடிங்கை விளையாட்டு போட்டியாக நடத்த வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் கோட்விட்டா போட்டி. இது கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்ற சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் கோடிங் தொடர்பாக மிக கடினமான கேள்விகள் கேட்கப்படும்.
இந்த போட்டியில் டெல்லி ஐஐடியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் மாணவன் கலாஷ் குப்தா பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய குப்தா முதலிடத்தை பிடித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தவர்கள் சிலி மற்றும் தைவான் நாடுகளை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து முதலிடத்தை பெற்ற கைலாஷ் குப்தா கூறுகையில், “நான் இந்த போட்டியில் பங்கேற்கும் போது முதல் இடத்தை பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் முதல் கேள்விக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஆரம்பத்திலேயே எனக்கு நம்பிக்கை போய்விட்டது. பின்னர் அடுத்தடுத்து கேள்விகளை எழுத எழுத முதல் மூன்று இடங்களுக்குள் வர வாய்ப்பிருப்பதாக நான் நம்பினேன்.” என்று தெரிவித்தார்.
கோட்விட்டா போட்டியில் முதலிடத்தை பிடித்த குப்தாவை டெல்லி ஐஐடியின் இயக்குனர் ரங்கன் பானர்ஜி வெகுவாக பாராட்டினார். மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு ஜேஇஇ நுழைவுத் தேர்வில், கலாஷ் குப்தா அகில இந்திய அளவில் 3ஆவது ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
