“ராமர் கோயில் – கேள்வி கேட்டால் ICE வைப்பார்கள்” : இளைஞரணி மாநாட்டில் கனிமொழி

Published On:

| By Kavi

Kanimozhi speech in Salem dmk youth wing conference

கட்டிமுடிக்காத கோயிலைத் திறக்கலாமா என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக இளைஞரணி மாநாடு இன்று (ஜனவரி 22) சேலம் மாவட்டம் பெத்தநாயகன்பாளையத்தில் நடைபெற்றது. கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் திமுக எம்.பி.கனிமொழி.

மாலை மாநாட்டில் உரையாற்றிய அவர், “சேலத்துக்குச் சுனாமியே வந்தது போல் இளைஞர் பட்டாளம் கூடியிருக்கிறது. இந்த மாநாட்டின் வெற்றிக்காக உதயநிதி தொடர்ந்து உழைத்திருக்கிறார்.எனக்கு மாநாட்டுக் கொடியை ஏற்ற வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் நன்றி.

இதே சேலத்தில் 1997ல் நடந்த மாநில மாநாட்டில் கலைஞர் கொடியை ஏற்றினார். 2004 ஆம் ஆண்டு வீரபாண்டியார் நடத்திய மாநாட்டில் தலைவர் ஸ்டாலின் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். இன்று இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வடநாட்டில் இருக்கக் கூடிய கருமையை நீக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. நாம் பெரியாரின் பிள்ளைகள். கொள்கைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் நாளை வட இந்தியாவில் ஒரு கோயிலைத் திறக்க இருக்கிறார்கள். அந்த கோயிலைத் திறப்பதைப் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை.

ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என கேட்கவும் போவதில்லை?

எனக்கு கோயில் திறப்பைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இங்கிருக்கக் கூடிய அறநிலையத் துறை அமைச்சரைக் கேட்கிறேன், முழுமையாகக் கட்டி முடிக்காத கோயிலைத் திறக்கலாமா? என சேகர்பாபுவை பார்த்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு சேகர்பாபு எழுந்து சிரித்தபடியே அமர்ந்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, “நாங்கள் தான் இந்துமதத்தை, கோயில்களை, சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம். எனவே எல்லா கோயில்களையும் எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொல்கிறவர்கள் கட்டி முடிக்காத கோயிலைத் திறக்கலாமா?

எங்கள் அண்ணி கூட இங்குதான் இருக்கிறார். அவருக்குக் கூட கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனென்றால் கட்டி முடிக்காத கோயிலைத் திறக்கக் கூடாது என இந்துமதம் சொல்கிறது.

ஆனால் அரசியலாக்கி, இவர்களது அரசியல் லாபத்திற்காக ராமர் கோயிலைத் திறக்கிறார்கள். அதுவும் தனியார் நிறுவனம் திறக்கக் கூடிய கோயிலுக்கு, அரசு ரயில்களை இலவசமாக விடுகிறார்கள். அரை நாள் விடுமுறை கொடுக்கிறார்கள்.

இதையெல்லாம் கேட்டால் நமக்கு ஐஸ் (ICE) வைப்பார்கள். வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறையை அனுப்புவார்கள். யார் கேள்வி கேட்டாலும், இவை அனைத்தும் நம்மைத் தேடி வரும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

குழந்தை ராமர் சிலையின் கண்கள் : சர்ச்சையின் பின்னணி என்ன?

மேடையில் ஸ்டாலினுக்கு உதயநிதி வைத்த டிமாண்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share