உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தியா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது. சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிட்யூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் வெளியீட்டுள்ள குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022 பட்டியலின்படி, உலகின் மிக அமைதியான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.அதைத்தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து கடந்த இரண்டு வருடங்களாக இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூக பாதுகாப்பு அளவு உள்ளிட்ட 23 அளவுகோல்களைக் கொண்டு இந்த மதிப்பீடுகள் வெளியிடப்படுகின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 129ஆவது இடத்திலும் இங்கிலாந்து 34ஆவது இடத்திலும் உள்ளன.
இந்த அறிக்கையின்படி கடந்த 2021ஆம் ஆண்டில் வன்முறை காரணமாக உலக பொருளாதாரம் 1,287 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலகளாவிய அமைதியின் சராசரி நிலை இந்த ஆண்டு 0.3 சதவிகிதம் குறைந்துள்ளது.
உலகின் குழப்பமான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் கடந்த ஐந்து வருடங்களாக முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஏமன் நாடும், மூன்றாவது இடத்தில் சிரியா நாடும் உள்ளன. இந்த வருடம் அமைதியில் பெரிய சரிவை கண்ட நாடுகளில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.