INDvsAUS: சென்னை சேப்பாக்கத்தில் இன்று (அக்டோபர் 8) நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்திய அணியின் அபார சுழலில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. முதல் 2 ரன்களுக்கு இஷான் கிஷன், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த விராட்கோலியும், கே.எல்.ராகுலும் பொறுமையுடன் விளையாடி இந்தியா அணியை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டனர்.
இருவரும் ஜோடி சேர்ந்து 165 ரன்கள் குவித்த நிலையில் சதத்தை நெருங்கிய விராட்கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றி இலக்கை தாண்ட செய்தார். அவருடன் ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
41.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் அடித்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
115 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 97 ரன்கள் அடித்த கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகள் பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய் – லோகேஷ் சண்டை: மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்
எம்.எல்.ஏ.க்களுக்கு பூஸ்ட்: அமைச்சர்களுக்கு உதயநிதி வைத்த செக்!
